அனைத்து பிரஜைகளுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி – அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவை எண்ணி எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்தத் தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பயிற்சி மக்கள் தமது சொந்தக் காலில் நிற்கவும் தலைமைத்துவக் குணங்களை ஊக்குவிக்கவும் ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டுக்கு பங்களிக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறைகள் பல நாடுகளுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவியுள்ளதுடன், இது இளைஞர்களுக்குப் பெருமளவில் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.