யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் நேற்று புறப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி ரயிலும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும் நேற்று ஆரம்பமாகின.

அவ்வாறே கல்கிசையில் இருந்து காலை 5.55 மணிக்கும் கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ்.தேவி ரயிலும் முற்பகல் 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் நேற்று சேவையை ஆரம்பித்தன.

ஏனைய ரயில் சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும். கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் இரவு தபால் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விவரங்களுக்கு 021- 222 2271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும். பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ரயிலில் பயணத்தை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.