சர்வதேச நீதிப் பொறிமுறை நோக்கி சிறீலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

“சிறீலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது, அரசியல்வெளி இல்லை, என்பதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் களமாக, மாவீரர் நாளுக்கான சிறீலங்காவின் தடைகள் அமைந்துள்ளன” என நாடுகடந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சிறீலங்காவின் அரச கட்டமைப்புக்கள் ஏற்படுத்தி வரும் தடைகள் தொடர்பிலும், தாயக தமிழ் அரசியல் தலைவர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர்களுக்கான நீதிக்கான பொறிமுறை உள்ளநாட்டில் இல்லை என்பது மீண்டும் நிருபணமாவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே தமிழர்களக்கான நீதிக்கான பொறிமுறையாக இருக்கின்றது.

சிறீலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் ஓர் களமாக, மாவீரர் நாளுக்கான சிறீலங்காவின் அரச கட்டமைப்புக்களின் தடைகள் அமைந்துள்ளன என்று கூறியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இனநாயக மயப்படுத்தப்பட்ட சிறீலங்காவின் அரச கட்டமைப்புக்களின் ஒன்றான நீதித்துறை, போர்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை தண்டிக்காது அவர்களை விடுத்து, நீதிவேண்டி போராடும் பாதிப்புக்கு உள்ளான மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் செயல்களையே முன்னெடுத்து வருகின்றது.

இனநாயகத்தின் பிரதிபலிப்பாகவுள்ள சிறீலங்காவின் நீதித்துறை என்பது,சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு நீதியினை நிலைநாட்டலாம். ஆனால் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகள் எனும் போது, அது இனநாயகத்தின் ஓர் கருவியாகவே சுதந்திர காலம் தொட்டு இயங்கி வருகின்றது.

தமிழர்கள் ஈடுசெய் நீதியினை வேண்டிவந்த நிலையில், சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதியின் முறையே, தமிழர்களுக்கான நீதிக்கு சிறீலங்காவில் இடம் இல்லை என்பதனையே இவைகள் வெளிக்காட்டி வருகின்றன. ஐ.நா மனித உரிமைச்சபையின் தீர்மானங்களில் இருந்து சிறீலங்கா விலகிய நிலையானது நிலைமாறுகால நீதியினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழின அழிப்பின் முதன்மைக் குற்றவாளியாக சிறீலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழர்களுக்கான நீதிப்பொறிமுறையோ, அரசியல் விருப்போ அல்லது ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலை நிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறீலங்காவில் கிடையாது என்கின்றது.

இந்நிலையில் தமிழர்களுக்கான நீதிக்கான பொறிமுறை உள்ளநாட்டில் இல்லை என்பதும் மீண்டும் மீண்டும் நிருபணமாவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே தமிழர்களக்கான நீதிக்கான பொறிமுறையாக இருக்கின்றது என்பதனை மாவீரர் நாளுக்கான வெளிக்காட்டுகின்றன.

இவ்வேளையில் தமிழர் தாயக அரசியல் தலைவர்களை நோக்கி வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம்.

சிறீலங்காவின் நீதிமன்றங்களை, நாடாளுமன்றத்தை யாவற்றையும் ஒரு களமாக கொண்டு, தமிழர்களுக்கான நீதியோ, அரசியல் வெளியோ இல்லை என்பதனை இன்னும் வீச்சாக சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுதரும் என்பதனை இடித்துரையுங்கள்.

மக்கள் மயப்பட்ட அரசியற் போராட்ட களமே அனைத்து தடைகளையும் உடைக்கின்ற ஆயுதமாக மாறும். தமிழர்களுக்கான நீதியையும் , அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான புதிய புதிய களங்களாக இவைகள் உருவாகட்டும் என்பதனையும் உரிமையோடு வேண்டுகிறோம் என”  தெரிவிக்கப்பட்டுள்ளது.