தமிழக மீனவர் மீதான தாக்குதல் – இலங்கையை எச்சரிக்க டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இலங்கை அரசிற்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“கச்சதீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழக மீனவர்களைக் காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்வதும், கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்துவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள ஈவு இரக்கமின்றி அடித்து உடைத்துச் சேதப்படுத்தி வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்வதும் இலங்கை கடற்படையினரின் தொடர்கதையாகி வருகின்றது.

இன்று நடைபெற்ற தாக்குதலில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் மற்ற மீனவர்கள் உயிர் தப்பித்தால் போதும் என்றும் கருதி திரும்பி வந்து விட்டார்கள் என வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றது.

இலங்கை கடற்படையினர் நம்நாட்டு மீனவர்களைத் தாக்குவதையும் அவர்கள் மீது கொடும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வீசுவதும் இரு நாட்டு நல்லுறவுகளுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத அணுகுமுறை. மீனவர்களை அச்சுறுத்தி, மனித உரிமையை சர்வதேச விதிமுறைகளை மீறும் அப்பட்டமான அடாவடிப் போக்காகும்.

ஆனால் நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டு கொள்ளாமல் தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது.

தங்களின் தினசரி வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு பரிதவிக்கும் மீனவர்கள் நலனில் பாராமுகமாக மத்திய பாஜக அரசும் ந்த அரசுக்கு அழுத்தம் தராமல் அதிமுக அரசும் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே, இலங்கைக் கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்டி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்விதத்திலும் துணைபோகக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று அவர் அந்த அறிக்கையில் கேட்டுள்ளார்.