சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் வடக்கு-கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30ஆம் திகதி வடக்கு – கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ்மாவட்ட செயலகத்தில் ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும்.

அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பமாகி காந்திபூங்கவரை சென்று ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள் கிடைப்பார்கள் என போராடி வருகிறார்கள். இதுவரை தமது உறவுகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் 72பேர் உயிரிழந்துள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் உயிரிழப்பது கூட இந்த அரசுக்கும்,  ஐக்கியநாடுகள் சபைக்கும் தெரியவில்லையா?  தொடர்ந்தும் உறவுகள் இறப்பதற்கு இடமளிக்காமலும்,  காலத்தை வீணடிக்காமலும் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுதர சர்வதேசம் முன்வரவேண்டும்.

எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெறும் கவயீர்ப்பு போராட்டத்திற்கு மதகுருமார்கள்,அரச அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,சமூகமட்டபிரதிநிதிகள்,அரசியல்வாதிகள்,ஊடகவியலாளர்கள், பொதுமக்கள்  என அனைவரும் கலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுதர அணிதிரளுமாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அதே போன்று இதே நாள் பிரித்தானியா,கனடா போன்ற புலம்பெயர் நாடுகளிலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக கவனயீர்ப்பு போராட்டம் முன்னேடுக்கப்படவுள்ளது.