தேர்தல் ஜனநாயக முறையில் இடம்பெறவில்லை- அனந்தி சசிதரன்

சிறீலங்காவில் இடம்பெற்ற தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்பது சசிகலாவிற்கு நடந்த சம்பவம் ஒரு உதாரணம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்யிட்ட அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இரவு வாக்கெண்ணும் நடைமுறையை தவிர்த்து பகல் எண்ணி பின்னர் முன்னர் எண்ணி முடிந்த வாக்கு எண்ணிக்கையை மறுநாள் அதிகாலை 2.30 மணி கடந்து உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள்.

பலமுறை தெரிவத்தாட்சி அலுவலரிடம் நான் முடிவை அறிவிக்குமாறு கேட்டும் பயனில்லை.

தேர்தல் நிறைவடைந்ததும் (8.8.2020) கையில் நியமன கடிதம் தருவதாக சுதந்திரக்கட்சி வேட்பாளர் அங்கயன் கூறியதற்கு அமைய அவருக்காக பணியாற்றியவர்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் முழுமையாக பின்னால் சென்றதை பார்த்தேன். தேர்தலுக்கு முதல்நாள் 5000 ரூபாய்கள் பணம் அங்கயன் குழுவினரால் வழங்கப்பட்டது.

தமிழ்தேசியம் பேசுகிற கட்சிகள் கூட மதுபானத்தை விநியோகித்தது. எனக்கு கிடைத்ததாக கூறப்படுகிற 9191 வாக்குகளும் உணர்வான வாக்குகள். கிளிநொச்சி வாக்குகள் அங்கு எண்ணப்பட்டு மறைக்கப்பட்ட தரவாக எண்ணுகிறேன். அங்கும் நிராகரிக்க முடியாத அளவு வாக்குகள் எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் முடிவுகள் தலைகீழானது.

மொத்தத்தில் எதிர்வரும் காலத்தில் பாராளுமன்ற தேர்தலை குத்தைகைக்கு வழங்கலாம். வன்னியில் கேணல் ரட்ணப்பிரியாவை ஆதரிக்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனரா என்ற நிலையும் தோன்றியுள்ளது. சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்குபற்றாதது ஒரு துரதிஸ்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.