உலகால் உடன்  பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்

போலந்தில் வாழ்ந்த யூதஇனச் சட்டத்தரணியான இராப்பேல் லெம்கின் (Raphäel Lemkin). ஏன்பவரே ‘இனஅழிப்பு’ என்ற சொல்லை முதன்முதலில் அரசியலில் வடிவமைத்தவர் 1944இல் இவர் எழுதிய ‘ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஐரோப்பாவின் கண்ணுக்குத் தெரியாத சுழற்சி அச்சு’ (Axis Rule in Occupied Europe) என்னும் நூலிலேயே ‘இனஅழிப்பு’ என்னும் சொல்லாட்சியை இனப்படுகொலைகளைக் குறிக்கும் சொல்லாக இவர் அறிமுகம் செய்தார். அந்நூலில் இவர் “ஒரு இனஅழிப்பைச் செய்பவர்கள் அதன் தொடர்ச்சியாக அந்த இனத்தின் பண்பாட்டு இனஅழிப்பையும் செய்வார்கள்” என மிகத் தெளிவாக எதிர்வு கூறியிருந்தார்.

இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இறைமையுடனும், தன்னாட்சியுடனும் வாழ்ந்து வரும உலகின் தொல்குடிகளான ஈழத்தமிழர்களின் மீது 1956ம் ஆண்டு முதல் ஐம்பத்து மூன்று ஆண்டுகாலம் தொடர்ச்சியாகப் பல இனஅழிப்புக்களைத் தனது படைபலம் கொண்டு செய்து வந்த சிறிலங்கா அரசு,அதன் உச்சமாக 2009இல் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் மக்கள் தொகையில் பத்திலொரு பகுதியினரை இனப்படுகொலை செய்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று 2020இல் ஈழத்தமிழர்களின் மீதான பண்பாட்டு இனஅழிப்பை கிழக்கில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்திக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தை, படைத்தலைமைகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் கையாளக்கூடிய முறையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்னாவைத் தலைவராகக் கொண்ட முற்றிலும் பதினொரு சிங்களவர்களைக் கொண்ட அரசஅதிபரின் நோக்குநிறைவேற்றுக் குழுவொன்றை,அன்றைய முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்குப் பொறுப்பான அதிஉச்ச இராணுவத்தலைமையாக இருந்தவரும், இன்றைய சிறிலங்காவின் அதிஉச்ச அதிகாரமுள்ள அரசஅதிபருமான கோத்தபாய இராஜபக்ச நியமித்ததின் மூலம்,ஈழத்தமிழின பண்பாட்டு இனஅழிப்பை தொடரத் தொடங்கியுள்ளார். இது இராப்பேல் இலெம்கின்னின் இனஅழிப்பின் தொடர்த்தன்மை குறித்த எதிர்வு கூறலை நிரூபிக்கும் உலகவரலாறாகி உள்ளது.

சிறிலங்கா அரசஅதிபரின் நோக்குநிறைவேற்றுச் செயலணிக் குழுவில் சிங்கள பௌத்த பேரினவாதத்தையே தனது பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டவர்களான எல்லாவல மெத்தானந்த தேரர், பனமுரே திலகவன் தேரர் ஆகியோரை நியமித்ததின் மூலம் சிங்கள பௌத்த பிரதேசமாக கிழக்கை அறிவிக்கக் கூடிய பலத்தை கோத்தபாயா பௌத்த அரசியல் அமுக்கக் குழுக்களுக்கு வழங்கியமை அமைகிறது.

சிங்கள பௌத்த பேரினவாதப் பிக்குகள் தாம் விரும்பியவாறு காண்களை அளந்து கட்டுப்படுத்தக்கூடிய வகையில் காணி ஆணையாளர்,நிலஅளவை ஆணையாளர் ஆகியோரையும்,பொதுபலசேனா என்ற சிங்களபௌத்த தீவிரவாத அமைப்பின் பொதுச்செயலளாளர் கலகொடே அத்தே ஞானசார தேரரின் உண்மைக்கு மாறான வடக்கு கிழக்குத் தமிழர் தாயகமல்ல சிங்கள நிலம்தான், இதனை இராணுவமே பாதுகாக்க வேண்டும் என்ற சிங்களபௌத்த கொள்கையாக்கத்தை நியாயப்படுத்தக் கூடிய முறையில் சிங்களப் பேராசிரியர் ஒருவரையும், சிங்கள விரிவுரையாளர் ஒருவரையும்,இவர்களுக்கு மக்களிடை இருந்து எதிர்ப்பு எழுவதைத் தடுக்கக் கூடிய முறையில் இவர்களைப் பாதுகாக்க மூத்த பொலிஸ் மா அதிபரையும்,மருத்துவரையும் கூட அந்தக் குழுவில் சிறிலங்கா அரசஅதிபர் இணைத்துள்ளார்.

இதன்வழி திட்டமிட்ட ஈழத்தமிழர் பண்பாட்டு இனஅழிப்புச் செயல்திட்டமொன்று சிறிலங்கா அரசஅதிபர் அவர்களால் முன்னிலைப்படுத்தப்படுத்தியுள்ளார். இது புதிய ஹிட்லசரிசம் ஒன்று ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கப்படுவதை தெளிவாக்குகிறது. இந்நிலையில் 1946இல் இலெம்கின்னின் சிந்தனையின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டு இன்றுவரை தொடரும் இனஅழிப்பு மற்றும் பண்பாட்டு இனஅழிப்பு தடுப்புச் சட்டங்கள் வழி ஈழத்தமிழர்கள் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய உலகின் பாதுகாப்புக்குரிய மக்களாகியுள்ளனர்.

அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட்டின் மீதான நிறவெறித்தனமான இனப்படுகொலைக்கு எதிராக உலகுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் உலகத் தமிழர்களாகிய நாம் உலகநாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் உலக மக்களுக்கும் ஈழத்தமிழர்களின் இந்த அவசர தேவையையும் காலந்தாழ்த்தாது உணர்த்தி அவர்களையும் உலகின் பாதுகாப்பைப் பெறவைப்பது எமது தலையாய கடமையாகிறது.