ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, நேற்று (31) பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
கடந்த அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முன்னுரிமைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது பிரதிநிதிகள் குழுவுக்குத் தெளிவுபடுத்தினார்.
அரச துறையின் மீளாய்வுச் செயற்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளின் ஊடான ஆட்சேர்ப்புகள் மற்றும் அரச துறைக்குள் மனிதவள நிர்வாகத்தினை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், டிஜிட்டல் அரச உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் அரச சேவை வழங்கலைத் திறம்படச் செய்வதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்குமான பணிகளுக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக விக்னராஜா இதன்போது தெரிவித்தார்.
திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை வலுப்படுத்துதல், நிலையான சுற்றுச்சூழல் வள மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துதல் என்பவற்றின் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வுக்காக நிதியைத் திரட்டுவதற்கான விரிவான காலநிலை நிதி மூலோபாயமொன்றைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கமளித்தார்.
எதிர்கால உலகின் உருவாகிவரும் வேலைவாய்ப்புச் சந்தைத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும், எதிர்காலப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு ஏற்பத் திறன் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்குமாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அமைப்பினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்கால துறைசார் கல்வி குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், இலங்கையின் ‘பராமரிப்புப் பொருளாதாரத்தை’ மேம்படுத்துதல், பெண்களின் உழைப்புப் பங்களிப்பை உயர்த்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் குறித்தும் இருதரப்பிற்கும் இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.



