நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் ‘அரசியல் கைதிகள்’ என எந்தவொரு தனிக் குழுவும் குறிப்பிடப்படவில்லை.
நீதிமன்றங்களின் ஊடாகக் கைதிகள் சந்தேக நபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்தப்பட்டு விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ வைக்கப்படுகின்றார்களே தவிர, அரசியல் கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
“சர்வதேச மட்டத்திலான பொருள்கோடல்களையே நாம் ஏற்கின்றோம்” என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தேர்தல் காலத்தில் வடக்கு – கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்தாரே, அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உள்ளதா? என்று அஜித் பி. பெரேரா மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கைதிகளின் பட்டியலைத் தான் பலமுறை ஆராய்ந்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பலர் குற்றவாளிகளாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அப்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைய, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும் பொதுமன்னிப்பு வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் நீதி அமைச்சர் கூறினார்.
மேலும், இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாடும் உள்ளடக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.



