டிட்வா சூறாவளிக்கு பின்னரும் நீடிக்கும் மலையக மக்களின் அவலம்: அரசாங்கத்தின் உத்தரவாதம் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பகுதிகளை கடுமையாகப் பாதித்த டிட்வா சூறாவளி தாக்கம் இடம்பெற்று ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக மீளாத நிலை தொடர்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து, இன்னும் தற்காலிக முகாம்கள், வாடகை வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்து வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள், நிலைமை இன்னும் சீரடையவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, இந்த அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்களும் இடம்பெற்றுள் ளன. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள நிலையில், அரசாங்கம் தனது திட்டங்களை யும் எதிர்கால நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளின் படி, டிட்வா சூறாவளி தாக்கத்திற்குப் பின்னரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது நிரந்தர குடி யிருப்புகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். தற்போது நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மற்றும் பாதுகாப்பு முகாம்களில் 465 குடும்பங்களைச் சேர்ந்த 1,337 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் இயங்கும் இரண்டு மத்திய நிலையங்களில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் தங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மத்திய நிலையத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் வசித்து வருகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு மத்திய நிலையங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இன்னும் தற்காலிக வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது பதுளை மாவட்டமாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் மட்டும் 1,003 பேர் தங்கியிருப்பது அனர்த்தத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. பல ஆயிரக் கணக்கான மக்கள் வாடகை வீடுகள், உறவினர்களின் வீடுகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரு வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குறித்த அனர்த்தத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்படி, டிட்வா சூறாவளி பாதிப்புகளுக்குப் பின்னான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சூறாவளி தாக்கி ஏழு மாதங்கள் கடந்திருந்தாலும் 35,000-க்கும் அதிகமான மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மலையகப் பகுதிகளில் ஆபத்தான நிலச்சரிவு அபாயம் கொண்ட இடங்களில் வாழும் மக்களுக்கு மாற் றுக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்னும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சாடினார். பல பகுதிகளில் நிலச்சரிவால் வீதிகளில் தேங்கியுள்ள மண்குவியல்கள் இன்னும் அகற்றப்படாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சேத மடைந்த பாலங்களுக்கு பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக மணல் மூடைப் பாலங்கள் கூட பின்னர் பெய்த மழையினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாமல் ராஜபக்ச தனது உரையில், டிட்வா சூறாவளி பாதிப்புகளுக்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவியையும், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடனுதவியையும் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வளவு பெரியளவிலான நிதியுதவி கிடைத் திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க் கையில் கணிசமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் விமர்சித்தார். அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த நட்டஈட்டுத் தொகைகளையே முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார். அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் நிர்வாக ரீதியாக மெதுவாக நகர்வதாகவும் இதன் விளைவாக பாதிக் கப்பட்ட மலையக மக்கள்  இன்னும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது உரையில் மலையக மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் குறித்து முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக டிட்வா சூறாவளி தாக்குவதற்கு முன்னரே மலையகத்தில் நடை முறையில் இருந்த இந்திய வீட்டுத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக அவர் சாடினார்.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தலா 4,500 வீடுகள் வீதம் மொத்தம் 9,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை ஒரு வீடு கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். அத்துடன், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 1,300 வீடுகளை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப் பட்டிருந்த போதும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் காரணங்களால் பயனாளிகள் மாற்றப்பட்டு திட்டம் கைவிடப் பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். “இது முந்தைய அமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம்” என்ற காரணத்தி னால் திட்டம் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதாக வும் அவர் கூறினார்.
ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 550 சதுர அடி பரப்பளவுள்ள வீடொன்றின் ஆரம்ப மதிப்பீடு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்திய அரசுடன் நடத்தப்பட்ட கலந்து ரையாடல்களின் காரணமாக அந்த மதிப்பீடு 28 இலட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு செலவு அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டினார். இதனால் மலையக மக்க ளின் நீண்டகால வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்பு இழக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பதில்: புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபாய் வீடு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அரசாங்கம் மலையக மக்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவிலான வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கு புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை 2026 ஏப்ரல் 6ஆம் திகதியன்று எடுத்த விசேட கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 650 சதுர அடி பரப்பளவுள்ள புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன், தலா 10 பேர்ச் காணியும் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
லயன் குடியிருப்பாளர்களுக்கும் முழுமையான நட்டஈடு
மலையகத்தின் பாரம்பரிய லயன் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு வீட்டு உரிமையோ காணி உரிமையோ இல்லாத நிலை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சொந்தக் காணி இல்லாத காரணத்தால் அவர்கள் நட்டஈடுகளை இழக்க நேரிடாது என அமைச்சர் உறுதியளித்தார். காணி உரிமை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களுக்குச் சமமாக, லயன் குடியிருப்பாளர்களுக்கும் 50 இலட்சம் ரூபாய் பெறும் உரிமை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது மலையக மக்களின் வரலாற்று குறைகளை நிவர்த்தி செய்யும் முக்கியமான கொள்கை மாற்றமாகக் கருதப்படுகிறது. பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பல லயன் குடியிருப்புகள் 150 முதல் 200 ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டடங்களாகும். பல கட்டடங்கள் முழுமையாக இடிந்து விழாத போதிலும் வாழத் தகுதியற்ற நிலையில் இருப்பதாக நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, அனர்த்த முகா மைத்துவ அதிகாரிகளால் வாழத் தகுதியற்றது என சான்றளிக்கும் குடியிருப்புகளுக்கு பழுது பார்க்கும் திட்டத்திற்கு பதிலாக புதிய வீடுகள் கட்டுவதற்காக நேரடியாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். இது பல தலைமுறைகளாக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக சேதமடையாத வீடுகளுக்கும் நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு நிதியம் மற்றும் பிரதேச செயலாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நிதி உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை மீளமைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சமந்த வித்யாரத்ன தனது உரையில் வீடமைப்பை மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும் முக்கியமாக எடுத்துரைத்தார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், பெருந்தோட்டத் துறையை கவனமாக நிர்வகிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார். இத்துறையின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துடனும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடனும் நேரடியாகப் பிணைந்துள்ளது என அவர் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்படி, தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் 400 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் அரசாங்கம் தினசரி 200 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்குகிறது. மீதமுள்ள 200 ரூபாயை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன என்று அவர் எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவின அழுத்தத்தை ஓரளவு குறைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
காணி உரிமைகளை வழங்கும் புதிய கொள்கை
மலையக மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் முக்கிய மானது காணி உரிமை தொடர்பானதாகும். முன்னர் நெடுங் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை 10 பேர்ச் வரை உயர்த்தியுள்ளது. மேலும், காணி உரிமப் பத்திரங்களை விரைவாக வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இது மலையக மக்களின் சமூக மற்றும் பொரு ளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையா கக் கருதப்படுகிறது. இதேவேளை, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அழுத்தங்கள் குறித்து அண்மையில் சர்வதேச மனித உரிமை அமைப் பான சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த விமர்சனங்களுக்கும் விடயத்து க்கு பொறுப்பான அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலளித் துள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்டத் துறையைப் பற்றிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் சில விமர்சனங்கள் முழுமையாக துல்லியமானவை அல்ல என அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான உண்மைத் தகவல்களை எதிர்காலத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். டிட்வா சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள் ஒரு இயற்கை அனர்த்தத்தின் விளைவாக மட்டுமல்லாமல், மலையக மக்களின் பல தசாப்த கால சமூக மற்றும் பொரு ளாதார பலவீனங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.
வீடமைப்பு, காணி உரிமை, அடிப்படை உட்கட்ட மைப்பு, பாதுகாப்பான குடியிருப்புகள், தொழிலாளர் நலன் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இன்னும் பல சவால்கள் நிலவுகின்றன.
அரசாங்கம் அறிவித்துள்ள 50 இலட்சம் ரூபாய் வீடமைப்பு திட்டம் மற்றும் காணி வழங்கும் திட்டங்கள் நடைமுறையில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டால், அது மலையக மக்களின் வாழ்க் கையில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அறிவிப்புகள் மட்டுமே போதுமானதல்ல. அவை காலதாமத மின்றி, வெளிப்படையாக, அரசியல் தலையீடுகள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
டி.ட்வா  சூறாவளி மலையக மக்களின் வாழ்க்கையில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
பல குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றன. பலர் நிரந்தர வீடுகளை இழந்துள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றனர். ஒருபுறம் எதிர்க்கட்சிகள் மீட்பு நடவடிக்கைகளின் மந்த நிலையை சுட்டிக்காட்டுகின்றன. மறுபுறம் அரசாங்கம் முன்னெப் போதும் இல்லாத அளவிலான வீடமைப்பு, காணி உரிமை மற்றும் நட்டஈடு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த விவாதங்களின் மத்தியில்  பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் தங்கியுள்ளது. அந்த மக்கள் பாதுகாப்பான வீடுகளிலும் நிலையான வாழ்வாதாரத்துடனும் மீண்டும் வாழத் தொடங்கும் வரை டிட்வா சூறாவளியின் கதை முடிவடையாது.