மாகாணசபை தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு: தேர்தல் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம். தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட  மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு மூன்று அவதானிப்புக்களை முன்வைத்துள்ளோம். அவற்றை செயற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு முறைமைஇதேவையான சட்டரீதியான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிர்வாகத் தயார்படுத்தல்களின் நிலைமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் மற்றும் – கட்டாய ஆசன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பல யோசனைகளை விசேட செயற்குழுவுக்கு முன்வைத்துள்ளோம்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசியல் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்களை முழுமையாக நிராகரிக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது. பொருளாதார பாதிப்புக்கு பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம்.அந்தத் தேர்தல்களை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் காணப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தை தொடர்ந்து எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை விசேட தீர்மானங்களை வழங்கியுள்ளது.

ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.