இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச் சைக்குரிய, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய சட்டக் கருவியாகப் பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கி வருகிறது. 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட இந்தச் சட்டம், தசாப்தங்களாகத் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை ஆயுதமாகவே பார்க்கப்பட்டது.
ஆயினும், சமகால அரசியல் சூழலில் இச் சட்டத்தின் பாய்ச்சலும் அதன் விளைவுகளும் இனப் பாகுபாடுகளைத் தாண்டி, ஒட்டுமொத்த அரச கட்டமைப்புக் கும், மாற்றுக்கருத்துடையோருக்கும் எதிரான ஒன்றாக விரிவடைந்துள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அரங்கேறிய சூடான விவாதங்கள், இச்சட்டம் எவ்வாறு இன்னும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை மீளவும் நிரூபித்துள்ளன.
எழுச்சிப் பாடலைப் பாடியதற்காக சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கைது செய்யப்பட்ட விவகாரம் பேசுபொருளாகிய இருந்த நிலையில், ஈஸ்ரர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான நடவடிக்கை, மற்றும் இவற்றுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் நிலவும் உள்முரண்பாடுகள் எனப் பல பரிமாணங்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் பரப்பை உலுக்கி வருகின்றன.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இளம் பாடகரான சங்கீத்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டக் காலப் பாடல்களை அல்லது அதன் உள்ளடக் கத்தைக் கொண்ட எழுச்சிப் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்ட போது, விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்ற பாரதூரமான குற்றச்சாட்டைப் பொலிஸார் முன்வைத்தனர்.
எனினும், பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மற்றும் அமைச்சர் ஆனந்த விஜே பால ஆகியோர் வெளியிட்ட தகவல்களின்படி, அவர் பாடியதற்காகக் கைது செய்யப்படவில்லை, மாறாகப் பாட லின் பொருள் காரணமாகவே கைது செய்யப்பட்டார் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
இச்சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் உரையாற் றிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக்கைதை வன்மையாகக் கண்டித்தார். ஒரு அமைப்பையோ அல்லது அதன் தலைவரையோ புகழ்ந்து பாடுவது அல்லது போற்றுவது என்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும், வன்முறையைத் தூண்டுவது அல்லது ஆபத்தான பயங்கரவாதச் செயலுக்கு நேரடியாக உதவுவது மட்டுமே குற்றமாக வகைப்படுத்தப்பட முடியும் என்றும், போற்று தலை சித்தாந்தக் கருத்தாகப் பார்க்க வேண்டுமே தவிர, பயங்கரவாதமாகப் பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக ளான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றோர் தங்களது நூல்களிலும் நேர்காணல்களிலும் விடுதலைப் புலிகளின் போர் நுணுக் கங்கள், ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ ஆளுமைகளைப் பாராட்டியுள்ளனர்.
இராணுவ உயர் அதிகாரிகள் பாராட்டும் போது அது குற்றமாகப் பார்க்கப்படாத நிலையில், ஒரு சாமானியத் தமிழ்க் கலைஞர் பாடும் போது அது பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படுவது சட்டத்தின் இரட்டைத் தன்மையைக் காட்டுகிறது.
பாராளுமன்றத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக, சங்கீத்சனுக்கு ஜனாதிபதியினால் முறைப்படியான தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தற்காலிக நிம்மதி எனினும், கலைஞர்கள் மீதான இத்தகைய அடக்குமுறை எதிர்காலம் குறித்த அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் மிகச் செல்வாக்கு செலுத்திய, முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஈஸ்ரர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சதித்திட்டக் குற்றச் சாட்டுகளின் பின்னணியிலேயே இவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் சுரேஷ் சாலேக்கு முதலில் 90 நாட்களும், பின்னர் மேலும் 90 நாட்களும் எனத் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுரேஷ் சாலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவருக்குரிய அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற சட்டம், இன்று நாட்டின் உயர் புலனாய்வு அதிகாரியாக இருந்த ஒருவருக்கு எதிராகவும் திரும்பியிருப்பது காலத்தின் முரண் நகையாகும்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எத்தகைய ஆபத்தானது, அது ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப எவரையும் விழுங்கக்கூடியது என்பதை சுரேஷ் சாலே யின் விவகாரம் தென்னிலங்கைச் சமூகத்திற்கு உணர்த்தி யிருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமவாயம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் உள்நாட்டு அமைப்பு கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தற்போதைய அரசாங்கமும் அதனை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த சட்ட ஒழிப்பு என்பது வெறும் கண் துடைப்பு நாடகமாகவே முடியும் என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஏனெனில், தற்போதைய சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அல்லது அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவு, பழைய சட்டத்தை விடவும் ஆபத்தான பிரிவுகளைக் கொண்டுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய சட்ட வரைவில் உள்ள குறைபாடுகளில் முதன்மையானது அதன் தெளிவற்ற வரையறையாகும். பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான துல்லியமான விளக்கம் தற்போதைய சட்டத்திலும் இல்லை. வரப்போகும் புதிய சட்டத்திலும் இல்லை.
இதனால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எவரையும் பயங்கரவாதியாக முத்திரை குத்த முடியும். இது மக்களாட்சி மீதான தாக்குதலாக மாறும் அபாயம் உள்ளது. சிவில் சமூகப் போராட்டங்கள், தொழிற்சங்க வேலைநிறுத்தங்கள், ஊடகவியலாளர்களின் புலனாய்வுக் கட்டுரைகள், கலைஞர்களின் படைப்புகள் போன்றவற்றை அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தூண்டலாக வியாக்கி யானம் செய்ய புதிய சட்டத்தில் இடமுண்டு.
மேலும், பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையி னருக்கும் நீதிமன்ற அனுமதியின்றி எழுந்தமானமாகக் கைது செய்யும் அதிகாரம் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இணங்காத, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய ஒரு சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றத் துடிப்பதை நீதி அமைச்சரின் அவசரக் கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் தேசிய மட்டத்திலான இந்தச் சட்டப் போராட்டங்கள் ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் முதன்மை அரசியல் சக்தியாக விளங்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் காணப்படும் உள்வீட்டு மோதல்கள் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒரு வரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான கருத்தியல் மற்றும் அதிகார மோதல் தற் போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுமந்திரன் தரப்பு மிதவாத, இராஜதந்திர அணுகுமுறையையும், சர்வதேச மற்றும் சட்ட ரீதியான தீர்வையும், தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனான இணக்கத்தையும் முன்னிறுத்துகிறது.
மறுபுறம், சிறிதரன் தரப்பு தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும், தரைமட்ட மக்கள் செல்வாக்கையும், சமரசமற்ற உணர்வுபூர்வ அரசியலையும் வலியுறுத்துகிறது.
இந்த இரு துருவ மோதலானது வெறும் தனிநபர் முரண்பாடல்ல. அது தமிழ்த் தேசிய அரசியல் பயணிக்க வேண்டிய பாதை எது என்பதைத் தீர்மானிக்கும் கொள்கை மோதலாகும். சங்கீத்சனின் கைது போன்ற தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வுசார் விடயங்கள் எழும் போது, சிறிதரன் தரப்பு அதனைத் தீவிர அரசியல் பிரசாரப் பொருளாக மாற்றி, தரைமட்ட மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்றிருந்தது.
மறுபுறம், சுமந்திரன் தரப்பு சர்வதேச சட்ட ரீதியான வழிமுறைகளின் ஊடாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்கொள்ள முனைந்திருந்தது. கட்சிக்குள் நிலவும் இந்த உள்முரண்பாடுகள் காரணமாக, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான தமிழர்களின் கூட்டுக்குரல் சிதறடிக் கப்படுகிறது.
ஒட்டுமொத்தத் தமிழ் சமூகமும் தங்களுக்கு எதிரான சட்ட அடக்குமுறைகளை எதிர்த்து ஓரணியில் நிற்க வேண்டிய சூழலில், பிரதான தமிழ் கட்சிக்குள் நிலவும் இந்த அதிகாரப் போட்டி அரசாங்கத்திற்குச் சாதகமான சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதன் விளைவாகவே சட்ட ரீதியாக பிணையில் விடுவிக்கப்பட்ட சங்கீத்சனை தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அழைத்துச் செல்லும் துரதிஷ்ட வசமான நிலைமை காணப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கையின் ஜனநாயக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள ஒரு புற்றுநோய் போன்றதாகும். பாடகர் சங்கீத்சனின் விவகாரம் கலைச் சுதந்திரத்தையும், சுரேஷ் சாலேயின் விவகாரம் அதிகார வர்க்கத்தின் வீழ்ச்சியையும், சுமந்திரன் – சிறிதரன் மோதல் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் ஒரே புள்ளியில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
அரசாங்கம் இன்னும் இரு மாதங்களில் பழைய சட்டத்தை நீக்கிவிட்டு, அதைவிடக் கொடிய புதிய சட்டத்தைக் கொண்டுவர முற்படுவது பழைய மதுவைப் புதிய மொந்தையில் ஊற்றுவதற்கு ஒப்பானது.
பயங்கரவாதம் என்பதற்கான சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான வரையறை உருவாக் கப்படாத வரை, இலங்கையில் கலைஞர்களும், ஊடகவி யலாளர்களும், அரசியல் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளேயே வாழ்வர்.
எனவே, வெறும் சட்ட மாற்றங்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த அரசியல் சிந்தனையிலும், மனித உரிமை மதிப்பீட்டிலும் தீவிர மாற்றம் ஏற்படாவிடில் இலங்கை சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப முடியாது.



