வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் தேர்தலை நடத்தி அதன் பின்னர் வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால்தான் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் மாகாணங்களுக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் இந்த வேலையைச் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றுவார் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஒருவேளை வடக்கு மாகாணத்திற்கு இத்தகைய காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டால், இந்த நாடு ஒரு கூட்டாட்சி ராஜ்யமாக மாறிவிடும் என்று சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இதுவரைகாலமும் இரத்தமும் தியாகமும் சிந்திப் பாதுகாத்து வந்த நாட்டின் ஒற்றையாட்சி முறைமை முற்றாக இல்லாமல்போகும் என குறிப்பிடப்பட்டார்.
எனவே, இது ஒரு தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும் என்றும், இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்றே தாம் நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



