பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பாடகரான சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று சனி்க்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தனன் (24) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்னமும் அவ்வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாத நிலையில், பயங்கரவாதத்டைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கும் இக்கைது குறித்து அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இந்நிலையில் அரச பயங்கரவாதத்தினால், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட கலைஞனை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்’ எனும் மகுடத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி, பழைய கச்சேரிக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.



