மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்த விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிரோஷன் பாதுக்க விடுத்துள்ள விசேட அழைப்புக் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் உத்திகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்த மிக முக்கியமான விடயங்களை ஆலோசிப்பதற்காக இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானமிக்க இந்தத் தேர்தல் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு, முன்னாள் மாகாணசபை பிரதிநிதிகள் பெற்றுள்ள அரசியல் அனுபவங்களும் பெறுமதிமிக்க கருத்துக்களும் அத்தியாவசியமானவையாகக் கருதப்படுகின்றன.

எனவே, இந்த விசேட கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் அழைக்கப்படுகின்றீர்கள்.