அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து உலங்கு வானூர்திகள்!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) பன்முகப் பயன்பாட்டு உலங்கு வானூர்திகள் கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளன.

இவற்றின் வருகையானது, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கை விமானப்படையின் செயற்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதில் ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகவும் விளங்குவதாக விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த உலங்கு வானூர்திகள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் கட்டமைப்பு மாற்றங்களுக்கும் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

தேவையான ஆய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வமாகச் சேவையில் இணைக்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காக நிறுத்தப்படும்.

இவை, இலங்கை விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்தும் அதேவேளையில், பரந்தளவிலான தேசியத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவை முதன்மையாக விமானி பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்படும் ஏனைய பொதுச் சேவை கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக விமானப்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.