விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது.
உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்திலேயே ஈகைச்சுடர் ஏற்றி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது.
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக, தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய பொன்.சிவகுமாரன், 1974 ஜூன் 5ஆம் திகதி கைது செய்யப்பட்டபோது நஞ்சருந்தி உயிர்மாய்த்துக்கொண்டார்.
தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலை சுட்டிக்காட்டி, தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துப் போராடிய பொன்.சிவகுமாரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதவழியிலான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த இளைஞனாக இவர் நினைவுகூரப்படுகிறார்.
பொன்.சிவகுமாரனின் தியாகத்தினை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை இந்த ஆண்டும் நினைவேந்தலை வழமைபோன்று உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக சகலரும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



