பேருந்து கட்டணம் தொடர்பில் அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (20) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வருகின்றது.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து, ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதால் அது பேருந்து கட்டணத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த டொலரின் பெறுமதி அதிகரிப்பானது பாரிய விளைவை ஏற்படுத்தும்.

இதனால் உதிரிப்பாகங்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளன.

அடுத்த மாத முற்பகுதிக்குள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தமது அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

எனவே பெரும்பாலும் பேருந்து கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அத்துடன் ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக குறைந்தபட்சம் அதிகரிக்கப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.