அரச திணைக்களங்கள் மீது வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக செயற்படுகின்றன என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்  வெள்ளிக்கிழமை (24) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டில் அதீத ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றது.

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகச் செயற்படுவது மிகுந்த கவலைக்குரியது.

உடனடியாக இவ்வாறான அதிகாரத்துவ முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.