பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த புதிய அனுமதி…

துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களைப் பெண் கழிவறைப் பணியாளர்களாக மாலை 6.00 மணிக்குப் பின்னர் பணியில் ஈடுபடுத்த முடியும் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்து, பெண் துப்புரவுப் பணியாளர்கள் அல்லது உணவு பொருட்களை பரிமாறுபவர்களாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணியில் இருந்து மறுநாள் காலை 6.00 மணி வரை பணியில் ஈடுபடுத்த முடியும் எனப் புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்தக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்காகப் பொருத்தமான தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் தொழில் வழங்குனரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.