யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கருத்துகளை ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவ் வகையில் யாழ் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
மேலும் இச் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சொகுசுக் கார்கள், ஆடம்பர விடுதிகள், இறால் பண்ணைகள், உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் காணப்படும் பல்பொருள் அடங்காடிகள் என்பன தொடர்பிலும், அந்தச் சொத்துக்கள் தொடர்பிலான முழுமையான விபரங்கள் தொடர்பிலும் புலன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
அவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.



