காணி வேலைதிட்ட வழக்கு – காணி அமைச்சருக்கும் சுற்றாடல் அமைச்சருக்கும் அழைப்பு

நாட்டின் நிலங்களை நிர்வகிக்க தேசிய திட்டத்தை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு காணி அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் மற்றும் பல தரப்பினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய ஆயம் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீந்திரன் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, நாட்டில் நில முகாமைத்துவத்துக்கான தேசிய திட்டம் இல்லாததால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

விவசாய நடவடிக்கைகள், காடுகள், சதுப்பு நிலங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படாததால் நாட்டில் பல சுற்றுச்சூழல் மற்றும் பிற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் உள்ள நிலங்களிலிருந்து முறையான நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

ஒரு தீவு நாடான இலங்கை, தனக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவது அவசியம் என்றும், முறையான நில முகாமைத்துவ திட்டம் இல்லாததால், சரியான உற்பத்தி இலக்குகளை அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்ட நீதியரசர்கள் ஆயம், இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள காணி அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.