மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் காண்டீபன் தலைமையில் இன்று (11) இடம்பெற்ற போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சபையின் உறுப்பினர் மொஹமட் முனவ்வர், வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றைஅமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியிருந்தார்.
அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார். இதன்போது எழுந்த துணை முதல்வர் கார்த்தீபன் அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத்தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே தான் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது எழுந்த மற்றொரு உறுப்பினரான லலித் ஜெயசேகர அண்மையில் மரணித்த பௌத்தபிக்கு ஒருவருக்கு சிலை அமைப்பதற்கு வவுனியா நகரில் இடம் ஒன்றை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன் சிலைகள் அமைப்பது தொடர்பாக முழுமையான தீர்மானத்திற்கூடாகவே செல்ல முடியும். சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டினார். எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன் இல்லை. எனவே சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.