ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரான் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

“இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. எனினும், ஈரானில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.

ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் உள்ள அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். ஈரானிய மண்ணில் இருந்தும் நேரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும்,இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களையோ அதன் எண்ணெய் நிலையங்களையோ இஸ்ரேல் குறிவைப்பதைத் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.