உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலேவுக்கு தொடர்புள்ளதாக பாராளுமன்றில் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஷ் சலே நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளதாகவும், இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட நான்கு பேரில் ஒருவர், இஸ்லாம் அடிப்படைவாதி என்றும், அவர் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், அவர் தற்போது வரை காணமால் போயுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாக்குதல் நடத்தப்படும் வரை இஸ்லாம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி, பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளும், முக்கிய விபரங்களும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை சுரேஷ் சலே முன்னெடுத்திருந்தார் என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.