இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பது கோழைத்தனமான கூற்று – ஹரினை சாடுகிறார் விமல்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாக கூறியிருப்பது பாரதூரமான கருத்து என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனஸ தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவிற்கு வழங்கப்படுவதனை குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தாா்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த விமல் வீரவன்ஸ, ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பது கோழைத்தனமானது. இலங்கையில் இந்திய அடிமைத்தனம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது? இந்த அரசாங்கமும், ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் எதிர்க்கும்பல்களும் எந்த அளவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்?

இலங்கையை இந்தியாவுடன் இணைப்பதற்கான சிறந்த நேரம் வந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது அந்த அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. அமைச்சர் ஒருவர் குறிப பிட்ட நாட்டுக்குச் சென்று தமது நாடு அந்நாட்டின் ஒரு பகுதி என்று கூறுவது பாரதூரமானதல்லவா? அத்தகைய அறிக்கையை வெளியிட அவருக்கு தார்மீக மற்றும் சட்ட அதிகாரம் உள்ளதா?

தாம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும்போது நாட்டின் ஐக்கியத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதாக கூறிவிட்டு, அதனை எந்த பாராளுமன்ற உறுப்பினரும் மீற முடியாது” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தாா்.