7பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல காலமாக தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகள் கோரி வருகின்றன. இது குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் கொடுத்திருந்தது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இது குறித்த முடிவை தமிழக ஆளுநர் இன்னும் எடுக்கவில்லை.

இதேவேளை 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். மேலும், இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.

முன்னதாக, பேரறிவாளனின் விடுதலை பற்றிய மாநில அரசின் 2018 பரிந்துரை குறித்து தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்  மூன்று – நான்கு நாட்களில் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றத்திடம் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் ஆளுநர் இது குறித்து முடிவெடுக்கலாம் என கூறிய நிலையில், ஆளுநர் மீண்டும் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.