41 இலங்கைப் பெண்கள் சவூதி அரேபிய சிறையில் – சர்வதேச மன்னிப்புச் சபை தகவல்

சவூதி அரேபியாவில் 41 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக காரணம் கூறப்படாது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

‘‘இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பெண்களுக்கு சிறுகுழந்தைகள் உள்ளனர். மற்றொருவருக்கு அவசர மருத்துவத் தேவை உள்ளது. இவர்களில் எவர் மீதும் எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதன் காரணத்தை அறிவதற்காக சட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பெண்கள் நாடு திரும்பி தமது குடும்பங்களுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்” எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது