வவுனியா ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்

சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி. ரெட்ணகாந்தன் தலைமையில் நினைவு கூரப்பட்டது.

அமையத்தின் செயலாளர் என்.ஜனகதீபன் முதற்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பின் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.  சிவராம் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு நாளாகும்.

இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவராமின் படுகொலை நடந்து 17 வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள்  தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1959 ஓகஸ்ட் 11 மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக கவனம் பெற்றன. அவர்,பத்திரிகை எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.