கிழக்கில் 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்! 09 மரணங்கள்

corona update கிழக்கில் 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்! 09 மரணங்கள்கிழக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுகளும், 09 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம் கூறி நிற்கிறது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இரு தினங்களாக இடம் பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் 684 தொற்றுக்கள், நேற்றைய தினம் 670 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் .

நேற்றைய தினம் ஏற்பட்ட 670 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப் பிரிவில் 261 தொற்றுக்களும், கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் 150 தொற்றுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 08 தொற்றுக்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 251 தொற்றுக்களும், ஏற்பட்டுள்ளன.

அம்பாறைப் பிராந்தியத்தில் அதிகூடிய 62 தொற்றுக்கள், தெஹியத்தகண்டியவிலும் 56 தொற்றுக்கள் உகனைப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப் பிராந்தியத்தில் அதிகூடிய 15தொற்றுக்கள் நிந்தவூர்ப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 25570 தொற்றுகளும், 432 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்கு மாகாணத்திற்கென கிடைக்கப் பெற்ற 9 லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 26 ஆயிரத்து 434 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு விட்டன. அதாவது 80 வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டு வருவதைக் காணக் கூடியதாயுள்ளது.,

கடந்த வாரங்களில் கிழக்கில் 200-250 நோயாளர்களும் 2-3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறி வருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருத முடியும்.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும், சமூக இடைவெளிகளை பேணுதல், முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதார நடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவு செய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021