இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைக் கண்டிக்கின்றோம்- அவுஸ்திரேலிய செனெட்டர் கண்டனம்

அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது என அக் கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நான் தமிழ் மக்களிற்கு ஆதரவை தெரிவிக்க விரும்புகின்றேன்  தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்விற்கு என்னை அவர்கள் அழைத்தது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் அகதிகள் பேரவை தமிழ் அகதிகளிற்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல் கல்வி தொடர்பான உதவிகளை வழங்குதல் அகதிகள் தொடர்பான பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கியமான சேவைகளை அகதிகளிற்கு வழங்கிவருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்துடன் முள்ளிவாய்க்கலில்  தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 14 வருடங்களாகின்ற போதிலும் அதற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களின் தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு எதிரான இராணுவநடவடிக்கையின் போது இவர்கள் முள்ளிவாய்க்காலில் சிக்கவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் பலர் இன்னமும் இலங்கை அரசாங்கத்திலும் இராணுவத்திலும்  உயர்பதவிகளில் நீடிக்கின்றனர், எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்டஇனப்படுகொலையை கண்டிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்குள் இருக்கின்ற  உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கின்றது எனவும்   அவுஸ்திரேலியாவில் உள்ள   ஈழம் தமிழ் அகதிகள்  அகதிகள் தொடர்பான தீர்மானங்கள் முடிவுகள் குறித்த தகவல்களை பெறுவதில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளின் அடைக்கல கோரிக்கைகளே அதிகளவு நிராகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் நாட்டில் உள்ள தமிழர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.