ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது

அப்பிள் டெய்லி பத்திரிக்கையின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் அந்தப் பத்திரிக்கை தனது பதிப்பை கடந்த வாரம் நிறுத்தியது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹொங்கொங்கில் கடந்த ஆண்டு  அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஹொங்கொங்  ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஹொங்கொங்கில் செயல்பட்டு வந்த பிரபல ஜனநாயக  ஆதரவு செய்தித்தாளான ‘அப்பிள் டெய்லி’ பத்திரிக்கையின் நிறுவனத் தலைவர் ஜிம்மி லேயை ஹொங்கொங்  காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஹொங்கொங் நிர்வாகம் எடுத்தது. அப்பிள் டெய்லி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செய்தித்தாள் நிறுவனம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந் நிறுவனம் தனது செயற்பாட்டை நிறுத்தியது.

அந்தப் பத்திரிக்கை மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளில் அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றிவந்த 5-க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பிள் டெய்லி பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் பஃங் வுய் ஹாங் கைது செய்யப்பட்டுள்ளார்.