வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் பெரும் பண மோசடி – தப்பியோட முற்பட்ட இளைஞர் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் 1 கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த, மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினராகிய சிறிது காலத்திலேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து, பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு 2022- 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக 1 கோடியே 25 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

பணம் கொடுத்தும் வெளிநாடு அனுப்பப்படாதது குறித்து சம்பந்தப்பட்டவர் வினவ ஆரம்பித்த போது, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் அவரை தவிர்த்து, தலைமறைவாகி விட்டார். அவர் திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாற பண மோசடியில் ஈடுபட்டமை விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது திருகோணமலை, மல்லாகம் நீதிமன்றங்களில் பணமோசடி வழக்குகள் நடந்து வருகின்றன. பணம் மோசடி செய்து ஆடம்பரமாக செலவு செய்வதே அவரது வழக்கம் என தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு சென்ற பிரதேச சபை உறுப்பினர், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு நோக்கி சொகுசு பேருந்தில் பயணித்தார். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பேருந்தை வழிமறித்த பொலிசார் அவரை கைதுசெய்தனர்.