வவுனியா பொது வைத்தியசாலையை மூட நடவடிக்கை

வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளை வவுனியா பொது வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் காரணமாக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், இன்று   திங்கட்கிழமை முதல் எந்தவொரு வெளி நேயாளியையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலை வைத்தியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மாத்திரமே சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட பிற தினசரி நடவடிக்கைகள் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இன்று வவுனியா பொது வைத்தியசாலை முழுமையாகக் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் வவுனியா சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.