அதிபர் தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன்- ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியுள்ளார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி பிரசாரம் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில்,ஜார்ஜியாவில் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்ட போது, “வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன். ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால் எனது வாழ்க்கை வீண் என்று நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்று கருதுவேன்.

அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். தேர்தலில் தோற்றால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். அதுபற்றி எனக்கு தெரிய வில்லை.

ஜோபிடன் குடும்பம் ஒரு கிரிமினல் நிறுவனம் போன்றது. ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்டு நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. ஆனால் உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது.

இந்த செல்வந்த தாராளவாத நயவஞ்சகர்களுக்கு நாம் ஒரு செய்தியை (தோல்வி) அனுப்ப வேண்டிய நேரம் இது” என்றார் ட்ரம்ப்.