வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்

அண்மையில் உலகெங்கும் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்ற ‘பிரபாகரன் சட்டகம்’ நூலிற்கு பெண்ணிய உளவியலாளரும், நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான பரணி கிருஸ்ணரஜனி எழுதிய அறிமுக உரை இது.

தமிழீழ செல் நெறி- யாப்பு – மறை : பரணி கிருஸ்ணரஜனி

சட்டகத்துக்குள் நுழைய  முன்……

இது பதிப்புரை அல்ல, ஏனெனில் நாம் பதிப்பாளர்கள் அல்ல. இது இந்நூலிற்கான அறிமுக உரையும் அல்ல.  இந்நூலிற்கான தேவை உருவாகிய வரலாற்றுப் பின்புலத்தை சுருக்கமாக விளக்குவது மட்டுமே இப்பதிவின் நோக்கம்.

ஓர் இனம்  தமக்கான தலைவனை வரித்துக்கொள்ளும் பாதையில் மிகுந்த தெளிவுடன் பயணப்படவேண்டும். பட்டறிவிலிருந்து கற்றுக்கொள்ளுதல், மௌனத்தை மொழியாகவும் செயலைக் குரலாகவும் பேசத்தலைப்படல், எதிர்காலம் மீதான ஆழ்சிந்தனைத்திறன், மாயைகளிலிருந்து விடுபட்ட துறவுப்போக்கு,  நீதியின்பால் வழுவாதிருத்தல், எண்ணியபின் துணிந்து செயலாற்றல் என்பனவற்றில் தலைமையின் ஆளுகைத்திறன் எந்தமனிதரிடத்தில் தனித்திறனாகத் தெரிகிறதோ அவரையே மக்கள் தலைவனாக வரித்துக்கொள்கிறார்கள். நதிக்கரை நாகரிகங்களிலிருந்து மேம்படத்தொடங்கிய மனிதக்குமுகாயம், தமக்குரிய தலைவனை வரித்துக்கொள்ளுதலுக்கான தொடர்பண்புகளாக இவையே இன்றுவரை நிலைத்துநிற்கின்றன.

FB IMG 1543057720143 வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்தமிழீழத்தவர்களின் தலைவனாக பிரபாகரன் என்ற மனிதன், வரலாற்றுப் பிரவாகத்தினூடு உந்தித்தள்ளப்பட்டமைக்கான முதிர்அடையாளங்களாக மேற்சொன்னவையே குறித்துக்கொள்ளப்படுன்றன. காலாதிகாலமாக; வரலாற்றுப்போக்கில் அரசர்களாக, தலைவனாக அடையாளப் படுத்தப்பட்டவர்களில் “அறத்தின்வழி சமராடிய தமிழன்” என்ற மேன்மைமிகு  தலைவராக அவர் இருப்பது இனியெவருக்கும் கிடைக்கப்பெறாத சிறப்பு. அவ்வாறே;  அரசொன்றை அமைக்கவெனச் சமராடியதோடு மட்டுமன்றி, அரசியல் நுட்பத்தினூடும் இலக்குநோக்கி நகர்ந்தவேளையிலும்  “தேர்தல்” எனும் நவீன அரச இயந்திரப் பொறிமுறைக்குள் சிக்காமலேயே, “தலைவர்” என மக்களால் விளிக்கப்பட்ட தலைவராகவும் பிரபாகரன் மாண்புறுகிறார்.

இந்த இனத்தின் அக முரண்பாடுகள், சிக்கல்கள், குழுவாத சிந்தனைகள், சுயநல விழுமியங்களை கிரமமாக உள்வாங்கி ஒரு நேர்கோட்டில் இழுத்து பிடித்து அதன் மீது ஆளுமை செலுத்திய ஒரு அதி மனிதன்தான் தலைவர் பிரபாகரன்.

இவ்வளவு பிறழ்வுகளுடன் இருக்கும் ஒரு இனத்தின் மீது ஆளுமை செலுத்துவதென்பது இலகுவான காரியமல்ல.. அதுதான் அவரைத் “தலைவர்” என்கிறோம். வரலாற்றில் இனி இப்படி ஒரு தலைமை உருவாக முடியாது என்ற தர்க்கம் இந்த அடிப்படையில்தான் வைக்கப்படுகிறதே ஒழிய அவரது படைத்துறை ஆளுமை, அரசியல் – போராட்ட பண்புகளின் அடிப்படையில் அல்ல..

இது பலருக்கு இன்னும் புரியவில்லை..

Nanthikadal1 வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்அதுதான் பதினொரு வருடங்களைக் கடந்தும் முரண்பாடுகள் இருந்தாலும் எமது அரசியல் உள்ளடக்கத்தை ஒரு புள்ளியில் எம்மால் குவிக்க முடியவில்லை – ஒரு தலைமையையும் அடையாளம் காண முடியவில்லை..

மாறாக உள்ளக முரண்பாடுகளை வளர்த்து அதை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி உதிரிகளாக பிளவுண்டு கொண்டிருக்கிறோம். இப்படித்தான் வரும் காலத்தில் நமது அரசியல் இருக்கப் போகிறது என்பதை நாம் “நந்திக்கடல்” செய்தியினூடாக தமிழின அழிப்பு நடந்து முடிந்து ஒரு சில மாதங்களிலேயே கண்டு பிடித்து விட்டோம்.
அதுதான் எல்லோரும் தோல்விக்கு, அழிவுக்குக் காரணம் யார்? என்று மாறி மாறிக் காறி உமிழ்ந்து கொண்டிருக்க நாம் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் இனத்திற்குமான உளவியல் அலைவரிசையைக் கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தோம். நந்திக்கடல் கோட்பாடுகள் உருவான கதையின் இன்னொரு பக்கம் இது.

முடிவில் பின்வருவனவற்றை முன்வைத்தோம்.. இதுவே நந்திக்கடல் கோட்பாட்டின் தொடக்கம். “தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.

தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை எமது ஆய்வினூடாக துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்தோம். பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பதே எமது ஆய்வின் மிக முக்கியமான முடிவு.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.
தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது” .இதை இனியாவது தமிழ்த் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் என்பது ஒரு இயக்கமல்ல – அது ஒரு காலகட்டப் பண்பாடு. தமிழர்களின் இயல்பான நண்டுப் பண்பாட்டின் விளைவாக மேலெழுந்த இந்த இனத்தின் அனைத்துக் கோளாறுகளையும் துண்டாடி – ஊடறுத்து தலைவர் பிரபாகரன் அந்தப் பண்பாட்டை உருவாக்கினார். அதுதான் புலிப் பண்பாடு.

இப்போது புலி நீக்க, புலி எதிர்ப்பு, இணக்க அரசியல், பிழைப்பு வாத போலித் தமிழ்த் தேசிய, ஒட்டுக்குழு ஆய்வாளர்கள் சேர்ந்தும், உதிரிகளாகவும் ஒரு பண்பாட்டை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.   புரட்சி, பண்பாடு என்பது போராளிகளால் மக்கள் பின்புலத்தில் நிகழ்த்தப்படுவதாகும், அது  எதிரிகளின் நிகழ்ச்சி நிரலை வரித்துக் கொண்டவர்களால் நிகழ்த்தப்படுவதில்லை என்பதை முடிந்தால் யாராவது இவர்களுக்குப் புரிய வைத்தால் புண்ணியமாய்ப் போகும்.

புலிப் பண்பாடு மீளுருவாக்கம் செய்யப்படாமல் இங்கு எதுவுமே சாத்தியமில்லை.

அந்தத் தலைவனை ஏற்றுநின்ற புலிகள், போராட்டத்தை ஒரு கோட்பாட்டுடன் நந்திக்கடலில் நிறுத்தினார்கள் என்பதைப் புரிந்து கொண்ட எதிரிகள் அதை மடைமாற்றப் படாதபாடுபடுகிறார்கள். 2009 இலிருந்து உற்பத்தியான இணக்க, அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல் முகவர்களைக் கொண்டு ‘நந்திக்கடல்’ முன்வைக்கும் எதிர்ப்பு அரசியலைத் தொடர் கேள்விக்குட்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.அதனால் இவை எது குறித்தும் கவனப்படுத்தாமல் ஒருமித்த சிந்தனை கொண்டவர்கள் ஒருங்கிணைந்து ‘நந்திக்கடலை’ கோட்பாட்டுருவாக்கம் செய்தோம் – இன்னும் செய்து கொண்டிருக்கிறோம். ஆழக்கடலை சிறு குச்சி கொண்டு அளக்கும் முயற்சி இது – ஆனாலும் பணி தொடர்கிறது.

இந்தப் பணியில் எம்மோடு இறுதியாக இணைந்து கொண்டவர்தான் கலாநிதி சு.சேதுராமலிங்கம். இவர் கனடாவின் மெமோரியல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி  பட்டமும் பெற்ற சிறப்புக்குரியவராவார். நந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கிய ஒரு தமிழ்த் தேசிய சிந்தனையாளனின் செறிவான பார்வை இந்த நூல்.

“பிரபாகரன் சட்டகம்” என்ற இத்தொகுப்பின் மெய்நோக்கமே;   தலைவர் என்ற சொற்பிரவாகத்திற்கான போரியல் அடையாளமாக மட்டும் அவரை நிலைநிறுத்தல் என்பதிலிருந்து மாறுபட்டு, உத்திகளானூடாகவும் தத்துவார்த்த இயங்குதிறனூடாகவும், எவ்வகையில் பிரபாகரன் மேம்பட்டு நிற்கிறார்  என வரலாறு எங்ஙனம்  அடையாளப்படுத்தியது என்பதை இலகுமொழியினூடு பேசுவதேயாகும். சுருங்கக்கூறின்; தத்துவார்த்த மொழியினை இலகுமொழியாக்கி,   மாபெரும்பாய்ச்சலூடு எமது போராட்டத்தினை நகர்த்திச்செல்லும் வரலாற்றுக் கணிப்பொறியே இந்நூலாகும்.

selva 9 வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், சுதுமலைப் பிரகடனம், வழியாக  நந்திக்கடல் கோட்பாடுகள்  என்ற புள்ளியில் வந்து இணைகிறது தமிழீழத்தின் அரசியல் செல் நெறி. இதைத் தமிழினத்தின் மறை அல்லது யாப்பு என்று கூடக் கொள்ளமுடியும்.  இதில் வரலாறு மிகத் தெளிவாகவே  பயணிக்கிறது. நந்திக்கடல் தவிர்ந்து ஏனைய மூன்று காலகட்டத் தீர்மானங்களும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால் நந்திக்கடல் அப்படியல்ல. அது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம். அது தமிழீழத்திற்கு மட்டுமன்றி உலகில் போராடும் தேசிய இனங்களின் மறையாக – யாப்பாக  – நெறியாக தன்னை வெளிப்படுத்தி நிற்கிறது.  இதுவே இதன் சிறப்பு.

இது வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் புரட்சியாளனின் கோட்பாட்டு பரிமாணம்.  இதுவரை கால மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் – விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான். ஏனைய தலைவர்களிடமிருந்து பிரபாகரன் வேறுபடும் முக்கிய பண்பு இது. இயல்பான அவரது இந்த பண்பை நந்திக்கடல் வரை சென்றும் அவர் இழக்கவில்லை. இதனூடாக பிரபாகரனை வரலாற்றில் நிறுத்தியிருப்பதே இந்த மவுனம் தான்.தொடர் தேடலாய், எல்லைகளற்று, முடிவிலியாய் விரியும் இந்த நூற்றாண்டின் அதி நவீன விடுதலைக் கோட்பாடான ‘ பிரபாகரனியத்தின்’ மைய சரடே இந்த மவுனம் தான். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு புரட்சியாளனின் மவுனத்தை உடைத்துக் கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது.

இதுவே நந்திக்கடல் கோட்பாடுகள் குறித்த சுருக்க விபரணம்.  இக்கோட்பாடுகளினூடான தாக்கமே ´´பிரபாகரன் சட்டகம்´´ எனில் அது மிகையல்ல.  பிரபாகரன் சட்டகம் என்பது தனிமனிதத் துதிபாடல் அல்ல.  மாறாக; அது ஓர் தேசிய இனத்தின் முழு அரசியல் அவாவையும் உட்செரித்து நின்ற தலைமகனின்  தீர்க்கதரிசனங்களைத் தத்துவப்படுத்தும் முதல்முயற்சி.

அடுத்து முப்படைகளையும் கட்டியெழுப்பி, வெளிச் சக்திகளில் தங்கியிருக்காமல் ஒரு நடைமுறை அரசை நிறுவிய புலிகளை இதுவரை யாருமே தத்துவப்படுத்தவில்லை – கோட்பாட்டுருவாக்கம் செய்யவுமில்லை. உலக பயங்கரவாத அரசுகளின் லொபிக்குள் புலிகளின் தியாகமும், அர்ப்பணிப்பும்  உள்மடிந்து எமது விடுதலை மடைமாறியதற்கான முதன்மைக் காரணம் இதுதான் என்று நாம் ஆழமாக நம்புகிறோம். தியாகங்கள், அர்ப்பணிப்புக்களை கோட்பாட்டுருவாக்கம் செய்வதனூடாகத்தான் அதை அர்த்தமுள்ளதாக்குவதுடன், அரசபயங்கரவாத நிகழ்ச்சி நிரலை ஊடறுத்து விடுதலையை நோக்கி நகர முடியும் என்ற முடிவுக்கும் நாம் வந்ததன் விளைவாகவே  நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கம் பெற்றது.

Nanthikadal2 வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்2009 புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகளின் சாதனைகளைப் புகழ்வதென்பதும்,  அவர்கள் உருவாக்கிய நடைமுறை அரசு குறித்து பேசுவதென்பதும,; அதைப் பதிவு செய்வதென்பதும் ஏதோ  வேண்டாத வேலை என்பது போலவும், கேலிக்குரியதாகவும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு உளவியல் பொதுப் புத்தியில் தந்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஊனமுற்ற உளவியலைக் குறிவைத்து புலிகளை தூற்றுவதும், அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதும்தான் ‘ சுய விமர்சனம்’ என்ற போர்வையில் நடந்தேறி வருகிறது. ஆனாலும் சமூக வலைத் தளங்களின் வழியாக சிலரது அயராத உழைப்பின் பிரகாரம் அவ்வப்போது புலிகளின் நியாயம் ஓரளவு பதிவு செய்யப்பட்டே வருகிறது.

ஆனால் இவை வரலாற்று நோக்கிலோ, அதை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாக அடையாளம் கண்டோ, படைத்துறை விஞ்ஞான அடிப்படையிலோ அவை பதிவு செய்யப்படவில்லை. பெரும்பாலும் உணர்வின் பாற்பட்ட பதிவுகளே அதிகம். 2009 இற்கு முன்பு கூட கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனாலும் விதி விலக்காக ஒரு தனிமனித ஆளுமையாக தராக்கி சிவராம் மேற்படி பன்முகக் கண்ணோட்டத்தில் புலிகளின் சாதனைகளைப் பதிவு செய்தார். அதனால்தான் அவர் கொல்லப்பட்டார். அதனால் தான் ´´பிரபாகரன் சட்டகம்´´ எனும் இக்கையேட்டை  புலிகளின் போராட்டத்தை விஞ்ஞானபூர்வமாக மட்டுமல்ல கோட்பாட்டு ரீதியாகவும் அணுகிய முன்னோடி என்ற அடிப்படையில் இந் நூலை ஆசிரியரின் விருப்புக்கமைய மாமனிதர் தராகி சிவராம் அவர்களுக்கே அர்ப்பணித்திருக்கிறோம்.

நந்திக்கடல் கோட்பாடுகளின் ஒரு தொகுதியை எழுதி முடித்துவிட்டு அதை அறிமுகம் செய்வதில் எமக்கு ஏகப்பட்ட குழப்பம். எதிரிகள் ஒரு பக்கமும் நோய்க்று நிரம்பிய நம்மவர்களின் எதிர்வினைகள் மறுபக்கமுமாக பெட்டியடிக்கப்பட்ட மக்கள் தொகுதிக்குள் இதை அறிமுகம் செய்வதில் ஒரு வகை திண்டாட்டம். அதையும் மீறி நாம் இதை அறிமுகம் செய்யும் முயற்சி நமக்கு போதிய பலனளிக்கவில்லை.இந்த நேரத்தில்தான் சேது எமக்கு அறிமுகமானார். அவரது புலிகள் தொடர்பான  எழுத்துக்கள் நம்மை ஈர்த்தன.  அவை எமது நந்திக்கடல் கோட்பாடுகளுக்கு ஒரு அறிமுக உரை போல் உள்ளதை அவதானித்தோம்.  அவரையும் எமது நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப்பள்ளியில் ஒருவராக இணைத்து இது குறித்த விளக்கங்களை கொடுத்து ஊக்குவித்ததன் விளைவே இந்த நூல். உண்மையைச் சொல்லப் போனால் எமது பணியை இலகுவாக்கி, ஒரு திறந்த வெளியை எமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார் சேது. அவருக்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழத்தின் மூத்த அரசியல் பகுப்பாய்வாளர் மு திருநாவுக்கரசு அவர்களுடன்  ஒருமுறைபேசிக் கொண்டிருந்த போது கூறினார், ‘ முள்ளிவாய்க்கால் இந்த உலகத்திற்கு புதிய சிந்தனையோட்டத்தைத் தரப்போகிறது, புதிய தத்துவங்களும், கோட்பாடுகளும்,சிந்தனைகளும் ஊற்றெடுக்கும் ஒருபல்கலைக்கழகமாக அது வரலாற்றில் திகழும்’ என்றார். இதே கணிப்பை வேறு சில ஆய்வாளர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது  கணிப்பில் ஒரு சிறு தவறு இருக்கிறது.

அது முள்ளிவாய்க்கால் அல்ல – அது  ‘நந்திக்கடல்’. இந்த உலக ஒழுங்கின், புவிசார் அரசியலின் பிரகாரம் ஒரு நிகழ்ச்சி நிரலின் வழி உருவாக்கப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ அது ஒரு பொக்ஸ். அது வழமையான சிந்தனைக்கு மேலும் வலுவூட்டும் ஒரு குறியீடே ஒழிய புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கப் போவதில்லை. ஆனால் நந்திக்கடல் இந்த ‘முற்றுகையை’ உடைத்து வெளியேறி தனக்கான தனித்துவ வெளியை உருவாக்கியபோதே அதன் சிந்தனையும் பரந்து விரிந்து விட்டது. இது நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கத்தின் இன்னொரு பரிமாணம்.

தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது. தோல்வி மனநிலையிலிருந்து எந்த அரசியலும் செய்ய முடியாது – எந்த போராட்டத்தையும் வடிவமைக்க முடியாது – எதிரியுடன் எந்த பேரமும் பேசவும் முடியாது. நாம் பதினொரு வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

ilakku may வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு இது. எனவே தோல்வி மனநிலையிலிருந்து வெளியே வருவது முக்கியம். அதற்கு உள்ளக – வெளியக எதிரிகள் கூட்டாக இணைந்து உருவாக்கிய தோல்வியின், வீழ்ச்சியின், அழிவின் குறியீடான ‘முள்ளிவாய்க்கால்’ இலிருந்து நாம் மன அளவிலும், கருத்தியல்ரீதியாகவும் வெளியே வர வேண்டும். இன அழிப்பு என்று வரும் போதே நாம் ‘முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரை உச்சரிக்க வேண்டும். மற்றபடி நாம் என்றும் விடாது உச்சரிக்க வேண்டிய குறியீட்டு சொல் ‘நந்திக்கடல்’. இதுவே எம்மை தோல்வி மனநிலையிலிருந்து

மீட்டெடுத்து ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குள் கொண்டுவரும் முதற் படிமுறையாகும். இப்படி நந்திக்கடல் கோட்பாட்டுருவாககம் பெற்ற நிலையை நாம் பல்வேறு வடிவங்களில் விளக்கம் செய்ய முடியும்.

இந்தப் பதினொரு ஆண்டுகளில் நடக்கும் அரசியல் தொடக்கம் சாதாரண உரையடல்களில்  கூட விதிவிலக்கில்லாமல் ஒரே ஒப்பாரியாக இருக்கிறது . தோல்வி உளவியல் அப்படியே வெளிப்பட்டது. இதிலிருந்து பெற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ எதுவுமில்லை. ஆனால் இளைய தலைமுறையிடம் இறுதிப் போர் குறித்து எந்தப் புகாரும் இல்லை.

அவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து விலகி நந்திக்கடலிலேயே தமது கவனத்தைக் குவித்ததால் வந்த தெளிவு அது. அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக, போராட்டத்தின் தொடர்ச்சியாக, வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. இது எமக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. எமது நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப்பள்ளியின் உறுப்பினர்களில் பலர் இளைய தலைமுறையினர் என்பதே இதற்கு ஒரு சான்று.
இது இன்னும் பல்கிப் பெருகி ஒரு கூட்டுச் சிந்தனையின் வழி இன்றைய உலக ஒழுங்கைக் கேள்விக்குட்படுத்தி தேசிய இனங்களின் இறைமைக்குரியதாக அதை மாற்றியமைப்பார்கள். அது அவர்களால் முடியும், ஏனென்றால் அவர்கள் முள்ளிவாய்க்கால் தோற்றுவித்த அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலிலிருந்து முற்றாக விலத்தி நந்திக்கடலின் எதிர்ப்பு அரசியல் உட்கூறுகளை முழுமையாக உள் வாங்கியவர்கள்.

புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரில் தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நோக்குடன் உட் புகுந்த பிராந்திய, மேற்குலக சக்திகளுக்கு எதிராக ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதியாக நின்று பிரபாகரன் ஆடிய பகடையாட்டத்தின் விளைவே இந்தக் கோட்பாடுகள்.

தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நோக்குடன் புராஜெக்ட் பெக்கான் எனும் ஒரு நாசகாரத் திட்டத்தை வரைந்து அதைச் செயற்படுத்தியது மேற்படி கூட்டணி. இவையெல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனை மண்டியிட வைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஒரு விடுதலைப் போராட்டத்தை, ஒரு தேசிய இனத்தின் இறைமையை தமது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க வைத்து அடிபணிய வைப்பதனூடாக ஒரு புதிய வரைபடத்தை வரைய முயன்ற உலக பயங்கரவாதத்தின் சதியை உணர்ந்து, அடி பணிய மறுத்து தலைவர் பிரபாகரன் வேறு ஒரு வரைபடத்தை வரைந்தார்.

அது மட்டுமல்ல புலிகளை அடிபணிய வைப்பதனூடாக ஒட்டுமொத்த போராடும் தேசிய இனங்களின் போராட்டங்களிற்கு ஒரு முடிவுரை எழுதும் பரீட்சார்த்த களமாகவும் தமிழீழத்தை மாற்றியது மேற்குலகம் – குறிப்பாக அமெரிக்கா.

ஆனால் தலைவர் பிரபாகரன் அதை உணர்ந்தே நந்திக்கடலில் போய் உறைந்து இந்தச் சூழ்ச்சியை முறியடித்து ஒரு புதிய கோட்பாட்டை அறிமுகம் செய்தார். அதுதான் போராடும் தேசிய இனங்களின் வருகையை எதிர்பார்த்து நந்திக்கடலில் காத்துக் கிடக்கிறது. இது நந்திக்கடல் கோட்பாடுகளின் இன்னொரு பரிமாணம்.
இப்படி பல் பரிமாணங்களையும், எண்ணற்ற தத்துவங்களையும் தன்னகத்தே  கொண்டுள்ளது நந்திக்கடல். நவீன மனித குலவரலாற்றை உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான வரலாறாக மாற்றி எழுதிய இந்த நூற்றாண்டின் தாய்ச்சமர்க்களம் நடந்த  நிலம் அது. வரலாற்றின் அதி உச்ச நிகழ்வு. காலங் கடந்து உலக வரலாற்றாசிரியர்களுக்கு, தத்துவவாதிகளுக்கு, கோட்பாட்டாளர்களுக்கு தீனி போடக் காத்துக் கிடக்கிறது அந்த நீர்ப்பரப்பு.

வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல தோற்றுப் போனவர்களும் வரலாற்றில் நினைவுகொள்ளப் படுவார்கள். ஏனென்றால் அவர்கள் போட்டிக் களத்தில் நின்றார்கள். ஆனால் வேடிக்கை பார்த்தவர்களுக்கு எந்த வரலாறும் இருக்கப் போவதில்லை. அதே போல் வீழ்ந்துபோன ஒரு போராட்டத்தை சரியோ , தவறோ அதை  முன்னகர்த்த, அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க அயராது முயன்று கொண்டிருப்பவர்களுக்கும் வரலாற்றில் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் தினமும் இந்த முயற்சிகள் மீது காறி உமிழ்பவர்களுக்கும், அவதூறு பேசுபவர்களுக்கும் எந்த வரலாறும் மிஞ்சப் போவதில்லை. 2009 மே இலிருந்து பல்வேறு தரப்புக்களால் பல்வேறு வழிமுறைகளில் தொடங்கப்பட்ட  ஒவ்வொரு முயற்சியையும் அவதூறுகளாலேயே நிர்மூலம் செய்த தரப்பின் தற்போதைய இலக்கு ‘நந்திக்கடல்’.

“நந்திக்கடல்” என்பதும் அது ஒரு கோட்பாட்டு வடிவம் அடைவதும் எதிரிகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் மேற்படி அவதூறு கும்பலுக்கும் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. “நான் இங்கு பேச விரும்பும், முன்வைக்க விரும்பும், விவாதிக்க விரும்பும் கருத்துக்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு முறையியலையோ பிரநிதித்துவப்படுத்துபவை அல்ல, நீண்ட தேடலின் விளைவாய் – ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் எழுந்த எனது தர்க்கரீதியான ஆய்வின் முடிவை நிராகரிப்பதற்கான எல்லா உரிமைகளையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்” என்றார் மிசேல் பூக்கோ. பூக்கோவை கிரமமாக உள்வாங்கிய எமக்கும் இதே கருத்துத்தான்..

photo15 வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்
National Leader Hon. Velupillai Prabakaran

தலைவர் ஒரு புரட்சியாளனாக இருந்து ஒரு கோட்பாட்டாளனாகப் பரிணமித்தவர். அவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து ஒரு புதிய வடிவத்தை நந்திக்கடலில் அறிமுகம் செய்தார். அதைக் கண்டடைவதும் கோட்பாட்டுருவாக்கம் செய்வதும் பின்னுள்ளவர்களின் பணி, கடமை.நிறைய போதாமைகள் உள்ள போதும் பெரும் பிரயத்தனப்பட்டு  நாங்கள் நண்பர்களாக அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவத்தைக் கொடுக்க முயன்று வருகிறோம்.

அதை ஏனைய ஆளுமைகளும் தொடர  வேண்டும் என்றும் விரும்புகிறோம். பல இளைய தலைமுறையினர் இணைந்து விட்டார்கள் என்பது பெரு மகிழ்வு. இதுவே எதிரிகளுக்குப் பதட்டத்தைத் தருகிறது.நாளை நமது “நந்திக்கடல்” வடிவம் ஏற்கப்படலாம், நிராகரிக்கவும் படலாம்.. அது எதுவாக இருந்தாலும் அதை ‘அ’ எழுதித் தொடக்கி வைத்ததற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவோம். அப்போது அவதூறு பேசியவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கும்.

இறுதியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புப்பேச்சுவார்த்தை, சுதுமலைப் பிரகடனம்,  நந்திக்கடல்கோட்பாடு,  என்பவற்றின் வழியே, பிரபாகரனின் மௌனத்தை, தமிழரின் செல்நெறியை, அறம்கொண்ட வேணவாவை தத்துவார்த்தமாகப் பேசப்போகும் இத்தொகுப்பானது, வரலாற்றின் பக்கங்களில் எமது போராட்டத்தைத் தத்துவார்த்தமாக நியாயப்படுத்தியும் மேன்மைப்படுத்தியும் பேசப்போகும் முதல் வெளியீடு என்பதில் நந்திக்கடல் கோட்டுருவாக்கப்பள்ளி பெருமிதம் கொள்கிறது.

இன அழிப்பினூடாகத் தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்ட பின்பாக புலிகளின் பக்கம் நின்று அவர்களது நியாயத்தையும், அறத்தையும், ஓர்மத்தையும், இறைமையையும், பரிமாணங்களையும், உத்திகளையும் கோட்பாட்டுருவாக்கம் செய்யும் முதல் நூல் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொள்கிறது ‘ பிரபாகரன் சட்டகம்’ . “பிரபாகரன் ஓர் தனிமனிதல்லர், அவர் ஓர் இனத்தின் அடையாளம்” என்பதனை உலகத்தமிழர் உரத்துச்சொல்ல ஏதுவான ஊக்கியாக இந்நூல் அமையும் என்பதனை உறுதிபட இயம்புவதில் பேருவகையடைகிறோம்.

இந்நூலிற்கான முகப்புஅட்டையைச் சிறப்பாக வடிவமைத்த தி.அ.றொபேட் அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.

இந்நூலை உலகெங்கும் எடுத்துச்செல்லும்  கனதியானபணியை Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினரே செய்கிறார்கள், அவர்களின்றி இவ்வெளியீடு சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்,

பரணி கிருஸ்ணரஜனி

நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி