வடக்குக்கான விஜயத்தை நாளை ஆரம்பிக்கிறாா் ஜனாதிபதி – பொது அமைப்புக்கள் போா்க்கொடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், தொடர்ந்து 7 ஆம் திகதிவரை வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் ஒன்றை யாழில் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்களின் அபிலாசைகள், அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலை மாணவர்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர். நாளை பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் மக்களை ஒன்றுசேருமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.