வடக்கின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஏன்? மனோ கணேசன்

வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மேலும் இது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முடிவு என்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ட்விட்டரில் “யாழ்ப்பாணத்திலிருந்த வட மாகாண பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம், இப்போது யாழ் மாவட்ட அலுவலகமாக குறைக்கப்பட்டு, வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும்” என மனோ பதிவிட்டுள்ளார்.