லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 130 பேர் உயிர் இழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த படகு நேற்று முன்தினம் திரிபோலியின் வடகிழக்குப் பகுதியில் சர்வதேச கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், லிபியாவில் செயல்பட்டு வரும் ஐரோப்பியாவின் கடல் மனிதாபிமான அமைப்பை சேர்ந்த ஊழியர்கள் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்த போது, விபத்துக்குள்ளான படகை மட்டுமே காணமுடிந்துள்ளது.
மேலும் பலமணிநேரம் தேடியும் ஒருவரைக் கூட அவர்களால் உயிருடன் மீட்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.