லண்டனில்  இந்திய வம்சாவளிகள் போராட்டம்

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் நிலையில், அப் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் இந்திய வம்சாவளிகள்  போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று லண்டனின் மத்திய பகுதியான ஆல்ட்விச்சில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் கூடி, மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததோடு, டிராஃபல்கர் சதுக்கப் பகுதியைச் சுற்றிப் பேரணியாகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் உடனே அப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் லண்டன் காவல்துறையினர் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.