ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகச் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை விண்ணப்பம் தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெளளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிக் கொழும்பு பிரதம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகச் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை விண்ணப்பம் தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த விசாரணைகளை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார். விண்ணப்பம் மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்தபோதிலும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகயீன முற்றிருப்பதால், இந்த விசாரணையை ஒத்திவைப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.