யுத்த குற்றங்களிலிருந்து படையினரைப் பாதுகாக்க நடவடிக்கை – சிறிலங்கா இராணுவத் தளபதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கின்றது என சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

படைசிப்பாய் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவேளை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எங்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை பேரவையால் சில விடயங்களை செய்ய முடியும் சில விடயங்களை செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியும்” என தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாங்கள் எவ்வளவு செய்துள்ளோம் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருந்தவேளை நாங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட்டோம். அதன் காரணமாகவே எங்களால் உயிரிழப்புகளை தவிர்க்கமுடிந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.