யாழ், மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு புதிய அரச அதிபர்கள் நியமனம்

யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தற்போது பணியிலிருக்கும் அரச அதிபர்கள் ஓய்வு பெறவிருப்பதனால், 2020ஆம் ஆண்டு இந்த இடங்களுக்கு புதிய அரச அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலுள்ள ஏனைய இடங்களுக்கும் அரச அதிபர்கள் மாற்றம் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக யாழ். மாவட்ட அரச அதிபர் திரு வேதநாயகன் மே 27ஆம் திகதியுடனும், மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு மோகன்ராஸ் யூலை மாதம் 07ஆம் திகதியும், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு உதயகுமார் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதியும் ஓய்வு பெறவுள்ளதால், இவர்களின் வெற்றிடங்களுக்கு புதிய அரச அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திருமதி சாள்ஸ், வரும் ஆண்டில் ஐப்பசி மாதம் 11ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமையையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு விசேட காரணங்களினால் அமைச்சரவை சேவை நீடிப்பு வழங்கினால் மட்டும் சேவையை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் ஓய்விற்குப் பின்னரான பதவிகளுக்கு, இப்போதே நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.