யாழில் நேற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி – புதுக்குடியிருப்பில் மற்றொருவருக்கும் தொற்றியது

யாழ்ப்பாணத்தில் நேற்றும் 12 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் யாழ்.மருத் துவபீட ஆய்வு கூடங்களில் 676 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய உடுவிலில் 8 பேருக்கும் (ஒருவரைத் தவிர 7 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையால் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்), சண்டிலிப்பாயில் 3 பேருக்கும் (தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையால் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்), தெல்லிப்பழையில் ஒருவருக்கும் (தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்தமையால் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்), புதுக்குடியிருப்பில் ஒருவருக்கும் (ஏற்கனவே தொற்றுகண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்), தம்பகொலபட்டின தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.