முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவுதினம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று பிரித்தானியாவில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தில் நேற்று (10) இடம்பெற்றிருந்தது.
இந்த கருத்தரங்கின் போது சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சி ஒன்று உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரும், பி.பி.சி ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளருமான பிரான்ஸிஸ் ஹரிசனினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக உறவுகள் கற்கைநெறிக்கான விரிவுரையாளர் மார்ச் லெஃபி தலைமை தாங்கியிருந்தார். மார்க் அரசியல் மற்றும் அனைத்துலக கற்கை நெறிக்கான திணைக்களத்தின் தலைவருமாவார்.
மேலும் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் தலைவரும், சிறீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஜஸ்மின் சூகா அவர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்.
அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் சட்ட நிபுணர் றுபேட் ஸ்கில்பெக்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் மேதல்களும், நீதியும் மற்றும் உரிமைகளுக்குமான மையம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.