சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தை மையப்படுத்தி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, பொலிஸ் காவலில் உள்ள நிலையில் அவருக்கு மோசமான முறையில் நடத்தப்படுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களை அடுத்தே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் பதிவாகக் கூடாது என்பதே அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளையும் சமநிலையான முறையில் ஆய்வு செய்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியையும் ஒரு சாதாரண சந்தேக நபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அந்த கடிதத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.