யுத்தத்துக்கு பின் முல்லைத்தீவில் 67 விகாரைகள் – அம்பலப்படுத்தும் ஓக்லாண்ட் ஆய்வு அறிக்கை

 

வடக்கு -கிழக்கு மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் தீவிரமான நில அபகரிப்பு இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இராணுவமயமாக்கல் அதீதமான அளவில் காணப்டுவதாகவும் உலகின் பல நாடுகளிலும் நில ஆக்கிரமிப்பு பற்றி ஆய்வு நடத்திவரும் ஓக்லாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 என்ற அளவில் இருப்பதாகவும், சுமார் 100 க்கும் மேற்பட்ட முகாம்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவக்கும் நாயாறுக்கும் இடையிலான 15 கிலோ மீற்றர் , முல்லைத்தீவுக்கு தாண்டுவனுக்கும் இடையிலான 15 கிலோ மீற்றர் , முல்லைத்தீவுக்கு ஓட்டுசுட்டானுக்கும் இடையிலான 26 கிலோ மீற்றர், முல்லைத்தீவுக்கு புதுக்குடியிருப்புக்கும் இடையிலான 17 கிலோ மீற்றர் பகுதிகளில் மட்டும் 33 இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அளவுக்கு அதிகமான இராணுவமயமாக்கல் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை மிக மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் மட்டும் ஆகக்குறைந்தது 16, 910 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை முல்லைத்தீவில் அபகரித்துள்ளனர். இதுபற்றிய விபரமான புள்ளிவிபரம் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காடுகளுக்குள் இருக்கும் முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள நிலம் கணக்கில் எடுக்கப்படவில்லை.

வன இலாகா திணைக்களம் 32, 110 ஏக்கர், வனஜீவராசிகள் திணைக்களம் 23, 515 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 202 ஏக்கர், மகாவலி அதிகாரசபை 4,368 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துள்ளன. அத்துடன், சுமார் 25, 000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் மணலாற்றில் வெலிஓயா பிரசதேச செயலக பிரிவு உருவாக்குவதற்காக கடந்த பல வருடங்களாக அபகரிக்கபப்ட்டுள்ளது. மொத்தமாக 80, 000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் முல்லைத்தீவில் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது காடுகள் தவிர பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உரிய மொத்த நிலபபரப்பில் ( 201,617 ஏக்கர்) 40 சத வீதத்துக்கும் அதிகமாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.”