மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய – இலங்கைக் கூட்டுச் செயற்குழு கூடுகின்றது

மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய – இலங்கைக் கூட்டுச் செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Fishermen Care என்ற தனியார் அமைப்புத் தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மேற்படி மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் மீன்பிடி தொடர்பான இந்திய – இலங்கை கூட்டு செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்ட போதிலும், உள்நாட்டு பிரச்சினைகளால் அந்தத் திட்டம் பலனளிக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சு இந்தக் கூட்டத்தை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய மீன் வளத்துறை அமைச்சு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இந்திய – இலங்கை கூட்டுச் செயற்குழு உருவாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2017-2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழுவைமடிப் படகுகளுக்குப் பதிலாக 750 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கொள்வனவு செய்ய உதவியாக தமிழக அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் 300 கோடி இந்திய ரூபாவை விடுவித்தமையும் இதன்போது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில், இராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளமொன்றை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும், இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பதில் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில் சத்தியக்கடதாசியை ஆராய்ந்த நீதிபதிகள், பொதுநல வழக்கினை ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.