மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை – அமெரிக்கா

மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “மியான்மர் இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீதான நடவடிக்கைகளை இன்று அறிவிக்கிறேன்.  மியான்மர் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியை இராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறேன். இது அவர்களது குடும்பத்தினர் மீதும் அடங்கும்” என்று தெரிவித்தார்.

இதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி,  இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை நைப்பியாவில் இராணுவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையிர் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தத் தாக்குதலில் இருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மியான்மர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “மியான்மரில் அவர்கள் தேந்தெடுத்த அரசுக்காக மக்கள் போராட்டம் நடத்துக்கின்றன. அமைதியாக போராடும் மியானமா் மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம். மக்கள் பொது இடங்களில் கூட கூடாது என்று  மியானமா் இராணுவம் அறிவித்துள்ளதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.