இயற்கை அனர்த்தங்களினால் தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள், செயற்கையாக ஏற்படுத்தப்படும் அழிவுகளையும் எதிர்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி,முதலைமடுவட்டை பகுதியில் யானைகளினால் வயல் நிலங்களும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் தொடர்ச்சியாக அழிவுகளை ஏற்படுத்திவருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நேற்று முதலைமடுவட்டை பகுதியில் உள்ள வயல் வாடியொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்கள் மற்றும் பலா மரங்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளதுடன் வயல் நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது 15க்கும் மேற்பட்ட தென்னைகளை அழித்துள்ளதுடன் காய்க்கும் நிலையில் இருந்த நான்குக்கும் மேற்பட்ட பலா மரங்களையும் அழித்துள்ளது.பல தென்னை மரங்கள் தற்போது காய்க்க ஆரம்பிக்க நிலையில் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது அறுவடை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வயல் நிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதன் காரணமாக விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றன.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் கூட்டம்கூட்டமாக வந்த யானைகள் பத்து ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய செய்கையினை முற்றாக சேதப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடனைப்பெற்றும் நகைகளை ஈடுவைத்தும் தாங்கள் மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் தங்களது வயல் நிலங்களை யானைகள் அழித்துள்ளதன் காரணமாக அனைத்தையும் இழந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமது அழிவுகளை உரிய அதிகாரிகள் பார்வையிட்டு நஸ்ட ஈட்டினைப்பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த விவசாயிகள் யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.